பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்த கே.பாலுவை நீக்கம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி.
பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து வந்த நிலையில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என அன்புமணி அறிவித்தார். இதற்கிடையே, அப்பா – மகன் மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பதும் தொடர்பான அறிவிப்புகளை இருவரும் மாறி மாறி வெளியிட்டு வந்தனர்.
இந்த சூழலில் தான், பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “பாமக சமூக நீதிப் பேரவைத் தலைவராக இருந்த வழக்கறிஞர் கே.பாலு, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவருக்கு பதிலாக வழக்கறிஞர் வி.எஸ்.கோபு சமூக நீதிப் பேரவை தலைவராக நியமிக்கப்படுவதாக” என்று தெரிவித்துள்ளார்.
பாமகவில் நீண்ட காலமாக பயணித்து வருபவர் கே.பாலு. இவர், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்தவர். பாமக தொடர்பான உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற வழக்குகளை இவர் தான் கவனித்து வருகிறார். டாஸ்மாக் தொடர்பாக இவர் தொடர்ந்த வழக்கில் தான், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : 11 பேரின் உயிரை காவு வாங்கிய RCB அணி..!! ஐபிஎல்லில் விளையாட ஓராண்டு தடை..? பிசிசிஐ அதிரடி..!!