பாமகவில் மாம்பழச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தனக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையில் கடந்த சில நாட்களாக கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பதில் அளிக்க அவகாசம் வழங்கியது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிந்தும், அன்புமணியின் தரப்பில் பதில் எதுவும் வழங்கவில்லை.
அதனைத்தொடர்ந்து பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.. அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணியை கடுமையாக சாடி வருகிறார். தாமே தலைவர் என அறிவித்த ராமதாஸ், மகள் காந்திமதியை செயல் தலைவராக நியமனம் செய்தார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தவெக தரப்பில் நேற்று காலை பொதுச்சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும். சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்பும் மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால், அந்த சின்னம் முடக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
Read more: தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை நெறிமுறைகள்…! டிராய் அறிவிப்பு…!



