நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை ஐபிஎல் கோப்பையும், பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அங்கு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காவல்துறை, பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால், அதையும் மீறி ஆர்சிபி நிர்வாகம் ஊர்வலத்தை நடத்தியது. அப்போது, அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என சொல்லப்படுகிறது. இதில், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகமே காரணம் என பலரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஆர்சிபி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த அசம்பாவிதத்திற்கு ஆர்சிபி காரணம் என்றால், கர்நாடக அரசும் ஒரு காரணம் தான். பெங்களூருவில் போக்குவரத்து மிகுந்த நகரில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது கடினம் என்று கர்நாடக அரசு கண்டிப்புடன் இதற்கு மறுத்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் தான் நிகழ்ச்சி குறித்து எங்களுக்கு தெரியும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் தான், இவ்வளவு பெரிய அசாம்பாவிதத்திற்கு காரணமான ஆர்சிபி அணியை ஒரு வருடம் ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், ஆர்சிபி அணி மீது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, ஆர்சிபி அணி மீது தடை அல்லது அபராதம் போன்ற ஏதாவது ஒரு நடவடிக்கையை பிசிசிஐ எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.