ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, மேடையில் நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு எனவும் நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் உள்ளிட்ட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆண், பெண் கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. அதன்படி, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறுகிறது. ஆசிய போட்டி நடக்கும் சமயத்தில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் நடைபெற உள்ளதால், 2ம் தர இளம் வீரர்களுடன், அந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் ஆசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கெய்க்வாட் ஏற்கனவே 2 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்ளார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள எம்எஸ் தோனி, அடுத்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், இந்திய அணியின் கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக பதவி உயர்வு பெற்றது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசிய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ருதுராஜ் கூறுகையில், இந்த வாய்ப்புக்கு உண்மையிலேயே நன்றி. இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையாக உணர்கிறேன்.
ஆசிய போட்டி போன்ற இவ்வளவு பெரிய நிகழ்வில் தலைமை தாங்குவது தனிப்பட்ட முறையில் எனக்கும் மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். எனவே உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன், மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, மேடையில் நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு எனவும் நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.