தமிழக அரசியலில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் முக்கிய கவுன்சிலர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. 2022-ல் சென்னையின் முதல் தலித் பெண் மேயராக பொறுப்பேற்ற பிரியா ராஜனின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அவர் சட்டமன்ற தேர்தலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, 2021 தேர்தலின் போது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் தோல்வியை தழுவியவர்கள் இம்முறை எப்படியாவது எம்.எல்.ஏ சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்காக அமைச்சர்களான மா. சுப்பிரமணியன் மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோரின் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
திரு.வி.க. நகரில் மேயர் பிரியா..?
இந்த ரேஸில் மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மேயர் பிரியா, தற்போது தனித்தொகுதியாக உள்ள திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தாயகம் கவி அங்கேயே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள போதிலும், இம்முறை உள்ளூர்காரர் மற்றும் பெண் வேட்பாளர் என்ற அடிப்படையில் மேயர் பிரியாவுக்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், துணை மேயர் மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவர்களை தவிர, சென்னை மாநகராட்சியை சேர்ந்த மேலும் 5 முக்கிய திமுக கவுன்சிலர்களுக்குச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
Read More : கொளுத்தும் கோடை வெயில்..!! ஏசி வாங்கப் போறீங்களா..? மின் கட்டணத்தை குறைக்க இது தான் பெஸ்ட் ஏசி..!!



