சீனாவிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில், குறைந்த விலையில் எஃகு (Steel) பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் எஃகு தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீது 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி சுங்கவரி விதிக்கப்படுகிறது.
இந்த சுங்கவரி முதல் ஆண்டில் 12 சதவீதமாக இருக்கும். இரண்டாம் ஆண்டில் இது 11.5 சதவீதமாக குறைக்கப்படும். மூன்றாம் ஆண்டில் 11 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
உலகில் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக உள்ள இந்தியா, சீனாவிலிருந்து பெருமளவில் வந்த குறைந்த விலை எஃகு பொருட்களால் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. இது இந்திய உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது..
இந்த சுங்கவரி சில வளர்ச்சி நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு பொருந்தாது. ஆனால் சீனா, வியட்நாம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் எஃகு பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படும். அதே சமயம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற சிறப்பு வகை எஃகு பொருட்கள் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
உள்ளூர் எஃகு தொழில்துறை குறைந்த தரம் மற்றும் குறைந்த விலையில் வரும் இறக்குமதிகளால் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என நிதியமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வர்த்தக பாதுகாப்பு துறை இயக்குநரகம் (Directorate General of Trade Remedies) நடத்திய விசாரணையில், “சமீப காலத்தில் திடீரென, மிக வேகமாக, குறிப்பிடத்தக்க அளவில் இறக்குமதிகள் அதிகரித்து, உள்ளூர் தொழில்துறைக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்று கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த 3 ஆண்டு சுங்கவரி பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு முன், 2025 ஏப்ரல் மாதத்தில் அனைத்து எஃகு இறக்குமதிகளுக்கும் 200 நாட்களுக்கு 12 சதவீத தற்காலிக சுங்கவரி விதிக்கப்பட்டது. அந்த உத்தரவு 2025 நவம்பரில் காலாவதியானது.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேம்பாட்டு சங்கம் (Indian Stainless Steel Development Association) ஆகஸ்ட் 2025-ல் வர்த்தக பாதுகாப்பு துறை இயக்குநரகத்திடம் மனு தாக்கல் செய்து, குறைந்த விலையில் வரும் சீன எஃகு இறக்குமதிகளுக்கு ஆன்டி-டம்பிங் வரி விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீன எஃகு ஏற்றுமதிகளைச் சுற்றி உலகளவில் அதிகரித்து வரும் வர்த்தக மோதல்களின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எஃகு இறக்குமதிகளுக்கு வரி விதித்ததைத் தொடர்ந்து, சீன எஃகு பொருட்கள் பிற நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டதால், பல நாடுகள் தங்கள் சந்தைகளை பாதுகாக்க வர்த்தக தடைகள் விதிக்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன எஃகு பொருட்களுக்கு ஆன்டி-டம்பிங் வரிகளை விதித்திருந்தன.
இந்த நிலையில், இந்தியாவின் புதிய சுங்கவரி உத்தரவு, உள்ளூர் எஃகு தொழில்துறையை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



