இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும்.
இந்தாண்டில் ஏற்கனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், 3-வது முறையாக மீண்டும் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில்தான், ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி ஏன் முக்கியம்..?
ரெப்போ உயரும்போது, வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ.30 ஆயிரத்தை 20 ஆண்டுகளுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதலாகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் இஎம்ஐ செலுத்தும் காலத்தை வங்கிகள் உயர்த்தும்.
உதாரணமாக, EMI ரூ.35,000 ஆக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகளாகும். இது வெறும் உதாரணம் மட்டும் தான். ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறுபடும். இந்நிலையில் தான், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்த முறை 25-50 பிபிஎஸ் புள்ளிகளை குறைக்க ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ ரேட்டை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. மொத்தமாக தற்போதைய நிதி ஆண்டிலேயே ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் 25 பிபிஎஸ் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.