இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய டி20 அணியில் சேர்க்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் பயந்து ஆடுவதுபோல் இருந்தது. மற்ற டி20 தொடர்களில் இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்தது உண்மை என்றாலும், 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஒரு போட்டியில் கூட 40 ரன்களே அடிக்கவில்லை. அந்த அளவிற்கு இந்தியாவின் ஓபனிங் கூட்டணி மோசமாக செயல்பட்டது.

அடுத்த ஐசிசி தொடரிலாவது இதயத்தை உடைக்கும் இன்னொரு தோல்வியைப்பெற விரும்பாத இந்திய அணி நிர்வாகம், டி20 தரப்பில் மறுசீரமைப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் அச்சமற்ற அணுகுமுறையை வளர்க்கும் மற்றும் பராமரிப்பதில் தோனி தலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக, டெலிகிராப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் மென்ட்டராக தோனி நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்திய அணியுடன் தோனியை இணைத்துக் கொள்ள பிசிசிஐ கலந்தாலோசித்து வருவதாக தெரிகிறது. 3 விதமான வடிவத்திலும் ராகுல் டிராவிட் நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்பதால், 2023 ஐபில் போட்டிகளுக்கு பிறகு தோனி ஓய்வு பெறும் நிலையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய டி20 அணியை தயார் செய்ய தோனியை நியமிப்பது சரியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் “அடுத்த ஆண்டு ஐபிஎல்-க்குப் பிறகு தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது அனுபவத்தையும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தையும் சரியான முறையில் பயன்படுத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. மூன்று வடிவங்களுக்கும் தனித்தனி நிர்வகிக்கும் முறை தொடர்பான முடிவு நிரூபணமானால், முன்னாள் கேப்டன் தோனியிடம் சிறப்பு வீரர்களுடன் பணியாற்றுமாறு கேட்கப்படலாம்” என எதிர்ப்பார்க்கப்படுகிறது.