திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். மேலும், கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ஒரு ஆடியோவையும் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜாமின் பெற்று வீடு திரும்பியபோது வீட்டில் ரிதன்யாவின் 2 செல்போன்களை கண்டெடுத்ததாகவும், அந்த செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் அந்த போனில் இருப்பதால், அந்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கவின் குமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மொபைல் போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 செல்போன்களையும் தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Read more: இந்த 3 ராசிக்காரர்களின் மாறப்போகுது! குபேரனின் அருளால் கோடீஸ்வர யோகம்!