ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநாகா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10வது நாள் சடங்கை செய்து முடித்திருக்கிறார்கள்.
கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை செய்துள்ளனர்.
பாகநாகா பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, ரயில் விபத்து ஏற்பட்ட போது நூற்றுக்கான நபர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். ஏராளமானோரின் உடல்களையும் மீட்டுக் கொடுத்தோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல அவர்கள் அனைவரையும் எங்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே நாங்கள் நினைக்கின்றோம். எங்கள் குடும்பத்தில் யாராவது பலியானால் இந்த சடங்கை செய்வது வழக்கம் அதேபோலவே எங்களுடைய ஊரில் பலியானவர்களையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து இந்த பத்தாவது நாள் சடங்கை நாங்கள் செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இங்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இன்னமும் 81 உடல்கள் இருக்கின்றனர். உறவினர்கள் அடையாளம் காணாமல் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இறந்து விட்டார்களா? என்று கூட உறுதி செய்ய இயலாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஒப்படைக்கப்படாமல் இருக்கும் உடல்களுக்கும் சேர்த்து இந்த இறுதி காரியத்தை நடத்த நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம் ஆகவே 288 பேருக்கும் இறுதி காரியத்தை செய்து முடித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்கள்.
தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு இருந்தவர்களுக்கு படையலிட்டு அதன் பிறகு இவர்கள் சாப்பிடுகிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையன்று கிராம மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குணம் பெற பிரார்த்தனை செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.