நீங்கள் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, அதில் வெறும் ரூ.6.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்..? ஆம், இது மத்திய அரசின் கனவுத் திட்டமான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் சாத்தியமாகும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், புதிய தொழில்களைத் தொடங்க துடிக்கும் தொழில்முனைவோருக்கு, மிகப்பெரிய மானியம் வடிவில் நிதி உதவியை வாரி வழங்குகிறது.
வழக்கமாக ஒரு தொழில் கடனுக்கு முழுத் தொகையையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில், PMEGP-ன் கீழ், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரருக்கு 15% முதல் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே, உதாரணமாக ரூ.10 லட்சம் கடனில், மானியத் தொகையை அரசாங்கமே செலுத்துவதால், மீதமுள்ள தொகையை மட்டுமே கடனாளிகள் திருப்பிச் செலுத்தினால் போதுமானது.
இந்த மானியத்தின் அளவு விண்ணப்பதாரரின் பிரிவு மற்றும் அவர் வசிக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக, கிராமப்புறப் பெண்கள், பட்டியல் இனத்தவர் (SC/ST), விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் போன்ற தகுதியுடையோருக்கு ரூ.10 லட்சம் கடனில் 35% அதாவது ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. நகர்ப்புறத்தில் உள்ள இதேபோன்ற பிரிவினருக்கு 25% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையும், சேவைத் துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கடன் பெற முடியும்.
யார் விண்ணப்பிக்கலாம்..?
18 வயதிற்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் புதிய தொழில் தொடங்குவதற்காக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு வங்கிகள் எந்தவிதமான பிணையமோ அல்லது அடமானமோ கேட்க வேண்டியதில்லை என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
இருப்பினும், சில நிபந்தனைகள் உள்ளன. ஏற்கெனவே தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்கள் அல்லது நிறுவன விரிவாக்கங்களுக்கு இந்தக் கடன் பொருந்தாது. மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். தனிநபர் அல்லாத நிறுவனங்களான பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், இந்து கூட்டுக்குடும்பம் (HUF) போன்றவற்றுக்குக் கடன் வழங்கப்படாது. இது தனிநபர்களுக்கு மட்டுமேயான திட்டம்.
இரண்டாம் கட்டக் கடன் : முதல் PMEGP கடனைப் பெற்று, அதனை வெற்றிகரமாக நடத்தி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தவணையைச் சரியாகச் செலுத்தியவர்கள், தங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்ய விரும்பினால், ‘இரண்டாம் கட்டக் கடன்’ திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பின் கீழ், தொழில்முனைவோர் ரூ.1 கோடி வரை கடன் பெற முடியும்.
மிக முக்கியமாக, இந்த இரண்டாவது கடனுக்கும் கூட 15% முதல் 20% வரை மானியம் கிடைக்கிறது. அதாவது ரூ.1 கோடி கடன் பெறுபவருக்கு, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை அரசு மானியமாக செலுத்த வாய்ப்பு உண்டு.
எங்கே, எப்படி விண்ணப்பிப்பது..?
புதியதாகத் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளை மேலாளரை அணுகலாம் அல்லது அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியான KVIC (Khadi and Village Industries Commission)-ஐ அணுகலாம். ஆனால், மிகவும் எளிதான வழி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டத் தொழில் மையத்தில் (DIC) உள்ள உதவி மையத்தை நாடுவதுதான்.
இங்குள்ள அலுவலர்கள், எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்து உதவிகளை வழங்குவார்கள். எனவே, தொழில் தொடங்கி முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த அரிய மானிய வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read More : திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள்..!! இதை செய்தால் முழு ஆசியும் கிடைக்கும்..!!