சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.25,000 அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இந்த திட்டம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய வடிவம் பெற்றுள்ளது.
தற்போதைய திமுக அரசு, குறிப்பாக ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்யும் ‘கிக்’ தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,000 ஊழியர்களுக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க தலா 20,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என நடப்பு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதற்கட்டமாக 100 தொழிலாளர்களுக்கு இந்த இ-ஸ்கூட்டர் மானியத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள தகுதியுள்ள தொழிலாளர்களுக்கும் விரைவில் இந்த மானியம் சென்றடையும் வகையில் நல வாரியம் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நேரமாகச் சாலைகளில் பயணிக்கும் டெலிவரி ஊழியர்களுக்கு, இந்த எலக்ட்ரிக் வாகன மானியம் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.



