தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்.
அதாவது, ரூ.2,500 மதிப்பிலான புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு உட்பட 11 பொருட்கள் வழங்கி சிறப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செலவினை இயன்றவரை உபயதாரர் மூலமும், உபயதாரர் கிடைக்கப்பெறாத நிலையில், திருக்கோயில் நிதி மூலமும் மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பாக திருக்கோயில்களில் விளம்பர பதாகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை கண்காணித்து சட்டமன்ற அறிவிப்பின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 43,748 திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சமணக் கோயில்கள் 22, திருமடங்கள் 45, திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 69, அறக்கட்டளைகள் 1,263 உள்ளடக்கியது ஆகும். அதேபோல், திருக்கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் அறநிலையத் துறை மீட்டு வருகிறது. மேலும், ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தற்போது கையில் எடுத்துள்ளது.
Read More : உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு..!! எஸ்.ஐ. தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!! தேர்வர்கள் அதிர்ச்சி..!!