தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையானது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 24,000 ரூபாய் நேரடி நிதியுதவியாக கிடைக்கும்.
முதலமைச்சரின் இந்த புதிய அறிவிப்பின்படி, மாதாந்திரத் தொகை உயர்வு மட்டுமின்றி, ஆண்டுதோறும் ‘கோடைக்கால சிறப்பு உரிமைத்தொகையாக’ தனியாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், ஒரு குடும்பத் தலைவிக்கு ஆண்டுக்கு 26,000 ரூபாய் வரை அரசின் நிதி சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “இது என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக தரப்பில் 2,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக ஒரு படி மேலே போய் கோடைக்கால சிறப்புத் தொகையையும் சேர்த்து அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதைக் கணித்த தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியே சுமார் 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 5,000 ரூபாயை ஒரே தவணையாக வரவு வைத்தது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மூன்று மாத முன்பணம் (3,000 ரூபாய்) மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை (2,000 ரூபாய்) என மொத்தம் 5,000 ரூபாய் பெண்களின் கைக்குச் சென்றுள்ளது. “தேர்தலால் தடையை ஏற்படுத்த நினைப்பவர்களை முந்திக் கொண்டோம்” என்று இதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
Read More : மாசி மாத வெள்ளிக்கிழமையின் சிறப்பு..!! வீட்டில் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமியை இப்படி வழிபடுங்க..!!



