கேரளாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கை, அம்மாநில மக்களின் நலன், சுகாதாரம் மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியில், பாஜக தலைவர் நிதின் நபின் இந்த ஆவணத்தை வெளியிட்டார். அவருடன், கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கட்சியின் பிற முக்கியத் தலைவர்களும் உடனிருந்தனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
ஏழைக்குடும்பத் தலைவர்கள், விதவைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.3,000 நலத்திட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 20,000 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்; அத்துடன் குழாய்வழி நீர் விநியோகக் கட்டமைப்புகளும் விரிவுபடுத்தப்படும்.
ஏழைக்குடும்பங்களுக்கு ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போது, தலா ஒரு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
கேரளாவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, ‘எய்ம்ஸ்’ (AIIMS) மருத்துவமனை நிறுவப்படும்.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், அனைவருக்கும் விரிவான மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.
விவசாயிகளின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து அத்தியாவசிய விவசாயப் பயிர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஆதரவு விலை வழங்கப்படும்.
ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக, மாதம் ரூ.2,500 மதிப்பிலான ‘உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அட்டை’ வழங்கப்படும்.
சபரிமலை மற்றும் குருவாயூர் போன்ற முக்கியக் கோவில்களைப் பாதுகாத்து நிர்வகிப்பதற்காக, தேவஸ்வம் வாரியங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
திருவனந்தபுரத்தையும் கண்ணூரையும் இணைக்கும் அதிவேக ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.
கேரள சட்டமன்றத் தேர்தல் 2026
கேரளாவில் உள்ள மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..



