சென்னையில் தொழிலதிபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கி 70 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த புகாரில், பிரபல நபர் ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்குமார், தனது பேருந்து போக்குவரத்து நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக பெரிய அளவிலான கடன் தேவையில் இருந்தபோது, தென்காசியைச் சேர்ந்த ஹரி நாடார் (எ) ஹரிகோபாலகிருஷ்ணன் (41) மற்றும் பாலு என்பவரை அணுகியுள்ளார். அப்போது ஆனந்த்குமாரிடம், தங்களால் 35 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தர முடியும் என இருவரும் நம்பிக்கை அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடன் தொகை கிடைத்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துவது போல, தலா 10 கோடி ரூபாய்க்கு மூன்று காசோலைகளும், 5 கோடி ரூபாய்க்கு ஒரு காசோலையும் என மொத்தம் 35 கோடி ரூபாய்க்கான ‘டிமாண்ட் டிராப்ட்’ (Demand Draft) காசோலைகளை ஆனந்த்குமாரிடம் வழங்கியுள்ளனர்.
கடன் தொகையை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கான கமிஷன் தொகையாக, ஹரி நாடார் மற்றும் பாலு ஆகியோர் ஆனந்த்குமாரிடம் இருந்து 70 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். ஆனால், அவர் அந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, அவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதுகுறித்துத் தொழிலதிபர் கேள்வி எழுப்பியபோது, இருவரும் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியிலும், பாலுவை சேலத்திலும் வைத்து சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைதான இருவரிடம் இருந்தும் 12 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், வரும் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியில் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : கொளத்தூரில் ரகசிய ஸ்கெட்ச்..!! முதல்வரின் கோட்டையை தகர்க்க முக்கியப் புள்ளியை களத்தில் இறக்கும் விஜய்..!!



