தமிழக அரசின் அதிரடி அறிவிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் நிலுவைத் தொகையுடன் சேர்த்து நேற்று ஒரே தவணையாக ₹5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நேற்று தொடங்கி இன்று (பிப்ரவரி 14) காலை வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தத் திடீர் வரவு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் சில தேவையற்ற வதந்திகளால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது கணக்கைச் சரிபார்க்கவும், பணத்தை எடுக்கவும் திரண்டதால் பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில், வரிசையில் நிற்பது தொடர்பாக பயனாளிகளிடையே சிறு சிறு வாக்குவாதங்களும், தள்ளுமுள்ளுகளும் ஏற்பட்டன. சில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தங்களுக்கு வந்த தொகை எவ்வளவு என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதை உடனடியாக கையில் எடுக்கவும் பெண்கள் காட்டும் ஆர்வம் வங்கிகளில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் நெரிசலுக்குப் பின்னால் ஒரு முக்கிய வதந்தி தீயாய்ப் பரவியதே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, “கணக்கில் போடப்பட்ட ₹5,000 ரூபாயை உடனடியாக எடுக்காவிட்டால், அரசு அந்தத் தொகையை மீண்டும் எடுத்துக்கொள்ளும் அல்லது வங்கிகள் அதனைத் திரும்பப் பெறும்” என்ற தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பயந்த பெண்கள், எங்கே பணம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவசரம் அவசரமாக வங்கிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். “பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை முழுமையாக அவர்களுக்கே சொந்தமானது. எக்காரணம் கொண்டும் இந்தத் தொகை திரும்பப் பெறப்படமாட்டாது. இது அவர்களின் அவசரத் தேவைகளுக்காகவும், பயன்பாட்டிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் நிதானமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தமிழக அமைச்சரின் மகள்..!! யார் இந்த இமயா..? என்ன படம்..?



