‘தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவை அமல்படுத்தியவர். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் மிக பெரிய அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுக்கு உட்கட்டமைப்பு பணிகளை செய்தது காமராஜர் ஆட்சி காலத்தில் தான். இன்று அனைத்து வீடுகளிலும், பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பிரதமர் மோடி.

ஆர்.எஸ்.எஸ். வரலாறு படிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் என்பது இன்று, நேற்று வந்த இயக்கம் அல்ல. இந்த இயக்கம் தேசபக்த இயக்கம், பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். நேருவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார். ஆனால், முடியவில்லை. தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழிக்க முடியாது. நாங்கள் நீதிக்கு, தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.