ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க, யுனெஸ்கோ (UNESCO) 1999-ல் இந்த நாளை அறிவித்தது. வங்காள மொழிக்காக போராடிய தியாகிகளை நினைவு கூரும் வகையில், தாய்மொழி உரிமையை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கமாகும்.. .தமிழ்நாட்டில், தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக கவியரங்கம், கருத்தரங்குகள் மூலம் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.. அந்த வகையில் தாய்மொழி தினத்தை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்..
அதில் “ நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்… தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்…” என்று குறிப்பிட்டிருந்தார்..
அந்த பதிவில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது.. திருவள்ளுவருக்கு காவி உடையா? முழு சங்கியாக மாறிய அதிமுக என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.. இந்த நிலையில் இபிஎஸ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கி விட்டு, வெறும் வாழ்த்து செய்தியை மட்டும் பதிவிட்டுள்ளார்.



