மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி..?
* இத்திட்டத்தின் பலனை பெற https://scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
* ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென்று தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், சேமிப்புக்கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதாரை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
* இத்திட்டத்தில் பலன்பெற கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in என்ற வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
* பின்னர், அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
* பின்னர், தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
* 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 31/08/2025-க்குள் வந்து சேர வேண்டும். அதேபோல், ம்ற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் 31/10/2025-க்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு ”மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032” அணுகலாம் அல்லது wclwo.chn-mole@gov.in என்ற மின்னஞ்சல் வழியாகவும், 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மத்திய நல ஆணையர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கே.ஏ.செபாஸ்டியன் C.L.S. தெரிவித்துள்ளார்.
Read More : கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!! இவர்கள் கட்டாயம் முக்கவகசம் அணிய உத்தரவு..!!