கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் வசித்து வரும் ராம்குமார் (30) என்பவர் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபீதா என்பவரும் கடந்த 2019இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, ராம்குமார் வேலை பார்த்து வரும் காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இந்த சூழலில் மனைவி சபிதாவை முழுமையாக பிரிய நினைத்த ராம்குமார், அவரது பெயரிலே மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தன்னுடன் பணிபுரியும் ரம்யாவை திருமணம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி நேற்று திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் உறவினர் முன்னிலையில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார் ராம்குமார். இதனையறிந்த மனைவி சபிதா, உடனடியாக தனது பெற்றோர் உறவினருடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு விரைந்தார். திருமணத்தை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு சற்று சலசலப்பும், கைகலப்பும் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க எண்ணிய ராம்குமார் மற்றும் ரம்யா ஓட்டம்பிடித்து அருகில் இருந்த திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இருவரும் காவலர்கள் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் மனைவியை விட்டு, இரண்டாவதாக வேறொர் பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.