இந்தியாவில் பெண்களின் நலனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கதாக 2015 ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய செல்வமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana) உள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பாக அவர்களின் உயர் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக, குறைந்த தொகையை முதலீடு செய்தாலும் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும். 10 வயதிற்குக் குறைவான பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை கடந்த பிறகு அந்த கணக்கை அவளது பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதில் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த முடியும்; ஆனால் 21 ஆண்டுகள் முடிவில் மட்டுமே முழு தொகையைப் பெற முடியும்.
முதலீட்டு வரம்பு குறைந்தது ஆண்டுக்கு ரூ.1,000 ஆகும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை ஆண்டுக்கு செலுத்தலாம். தற்போது 8% வட்டி வழங்கப்படுவதுடன், அது கூட்டு வட்டியாக சேர்க்கப்படும். உதாரணமாக மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.11.16 லட்சம் கிடைக்கும். அதேபோல் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், திட்ட காலத்தின் முடிவில் சுமார் ரூ.67.3 லட்சம் பெறலாம்.
வரி சலுகை தரும் திட்டமாகவும் இது பயன்படுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். மேலும் இதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி விதிக்கப்படாது. முக்கியமாக, இடைக்கால தேவைகளுக்காக பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. பெண் குழந்தையின் மேல்படிப்பு அல்லது திருமணம் போன்ற அவசர தேவைகளுக்காக, கணக்கில் உள்ள தொகையின் 50% வரை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தை அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் எளிதாக தொடங்கலாம். பெண்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த சேமிப்பு வாய்ப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



