புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளையரசன் என்பவர், ஃபிங்கர் என்ற கடன் செயலி மூலம் ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். மேலும், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய நேரத்திலும் இளையரசன் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனால், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் இளையரசனை தொடர்பு கொண்டு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை இளையரசன் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, இளையரசனின் புகைப்படத்தை, அந்த மர்ம நபர் ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளார். இதனால், பயத்தில் இளையரசனும் ரூ.63,089 வரை பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும், அந்த நபர் விடாமல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த இளையரசன், புதுச்சேரி ஃசைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதன்படி, அசிமுதீன் என்பவர் தனது வங்கிக் கணக்குச் சான்றுகளை, சென்னையை சேர்ந்த சதாம் அன்சாரி (34) என்ற நண்பருக்கு வழங்கியுள்ளார். இதை பயன்படுத்தி, அவர் மோசடி செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், இந்த மோசடியின் முக்கிய புள்ளிகள் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சதாம் அன்சாரியை கைது செய்த போலீசார், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், துபாயில் வசித்து வரும் மோசடி நபர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.