கொங்கு மண்டலத்தையும் மேற்கு தமிழகத்தையும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றும் நோக்கில், அக்கட்சியின் தலைமை பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் பலமான கரூர் மாவட்டத்தில் அக்கட்சிக்குச் செக் வைக்கும் விதமாகப் புதிய அரசியல் நகர்வுகள் அரங்கேறியுள்ளன.
கரூர் மாவட்ட திமுகவின் முக்கிய முகமான அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், அதிமுகவின் கரூர் தெற்கு நகர ‘அம்மா பேரவை’ இணைச் செயலாளர் சரவணகுமார் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சரவணகுமாருடன் சுமார் 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகித் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டது, அந்த மாவட்ட அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தைத் தனது அரசியல் பலமாகத் தொடர்ந்து தற்காத்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது சொந்தப் பாசறையிலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது தமிழக அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகமும்’ தனது பார்வையை மேற்கு மண்டலத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இதனால் வரும் தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் மும்முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, செந்தில் பாலாஜியின் இந்தத் தொடர் அதிரடிகள் கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் திமுகவின் கரத்தை வலுப்படுத்தினாலும், மற்ற கட்சிகளின் புதிய வியூகங்கள் இந்தப் பிராந்தியத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Read More : விதியை மாற்றும் குலதெய்வ வழிபாடு..!! வாழ்வில் தடைகள் நீங்கி வெற்றி பெற முன்னோர்கள் காட்டிய எளிய வழி..!!



