மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரைச் சேர்ந்தவர் விநாயக சவுத்திரி (44). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் சிலர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலைமை ஆசிரியை மலர்மதி, பள்ளி மேலாண்மை குழுவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி மேலாண்மை குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் வழங்கினர்.
இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முத்துக் கண்ணன் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தினார். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் விநாயக சவுத்திரி பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துக் கண்ணன் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் விநாயக சவுத்திரியை கைது செய்தனர்.