தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம், வழக்கத்தை விட முன்கூட்டியே அதிரடி திருப்பங்களுடன் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகின்றன. இந்த மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக, பாமக ஏற்கனவே 18 தொகுதிகள் என்ற உடன்பாட்டுடன் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பாஜக தரப்பில் சுமார் 50 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அந்த தொகுதிகளில் பாஜகவுடன் வரும் சிறிய கட்சிகளுக்கான இடங்களையும் ஒதுக்கிவிட அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, டிடிவி தினகரன் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) குடையின் கீழ் கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதில் டிடிவி தினகரன் குறித்த சிக்கல் எடப்பாடிக்கு பெரிதாக இல்லை என்றாலும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அணிக்குள் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தரப்பில் இன்னும் முரண்பட்ட நிலைப்பாடே நீடிக்கிறது.
இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது, ‘கூட்டணி ஆட்சி’ குறித்த அமித்ஷாவின் முன்மொழிவுதான். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு திராவிட கட்சியும் கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்ததில்லை. ஆனால், இம்முறை வெற்றி பெற்றால் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று அமித்ஷா சொன்னபோது, அதற்கு பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்ததாக தெரிகிறது.
எடப்பாடியை பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்க விரும்பினாலும், தற்போதைய அரசியல் சூழலில் பாஜகவின் நிபந்தனைகளை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் அவர் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Read More : 1.91 கோடி குடும்பங்கள்.. 50,000 தன்னார்வலர்கள்..! “உங்க கனவ சொல்லுங்க..” புதிய திட்டம் இன்று தொடக்கம்!



