கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளது.
2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4% உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ்-ன் மார்ச் காலாண்டு வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2022 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.78,439 கோடியாக இருந்தது. தற்போது வருவாய் 35% உயர்ந்துள்ளது. இதற்கிடையே, டாடா மோட்டார்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 3.36% உயர்ந்து 533.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.1,033 கோடி நஷ்டத்தை சந்தித்தது. தற்போது மார்ச் காலாண்டில் ரூ.5,408 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. இன்று டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4% அதிகரித்து 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் இந்திய சந்தையின் வளர்ச்சி ஆகியவற்றால் டாடா நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் இறுதியில் ரூ.400 வரை சரிந்த டாடா மோட்டார்ஸ்-ன் பங்குகள், அதிலிருந்து திடீரென 20% மேல் உயர்ந்து தற்போது ரூ.514 என்ற நிலையில் உள்ளது. ரூ.400 விலையில் ஒரு லட்சம் முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ.28 ஆயிரத்திற்கு மேல் லாபத்தை பெற்றிருப்பார்கள். 4ஆம் காலாண்டில் கமர்சியல் வாகன விற்பனை மூலமான வருவாய் 14% உயர்ந்து ரூ.21,200 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலமான வரிக்கு முந்தைய லாபம் ரூ.1,700 கோடி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஸ்மார்ட் நகரங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மேலும், டெல்லியில் 1,500 பேருந்துகள், பெங்களூருவில் 921 பேருந்துகள் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் 200 பேருந்துகள் இயக்குவதற்கு டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது.