எனக்கும் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை
இயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர். அண்மையில்
பிரபலமான சர்மிளாவைப் பலரும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். சர்மிளாவுக்கு
கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர்
செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று அவர் பணியை திடீரென ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்தில் பயணச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாகப் பேருந்து உரிமையாளரிடம் முறையிட்ட போது, உன் விளம்பரத்திற்காக பேருந்தைப் பயன்படுத்துகிறாயா என திட்டியதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, பணியை விட்டு விலக முடிவு செய்ததாகவும் கூறினார். இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு இதுதொடர்பாக கூறுகையில், எனக்கும் ஓட்டுநர் சர்மிளாவுக்கும் எந்த பிரச்னையுமில்லை. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு தவறு. அவர்களே பணியிலிருந்து விலகி கொள்கிறேன் என்றார்கள். நான் ஏதும் சொல்லவில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் பணியில் தொடரலாம் என தெரிவித்தார்.