கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் தேதி இரவு 7:30 மணி முதல் இரவு 8:50 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மாணவி உடனடியாக புகார் அளித்த நிலையில், கஸ்பா காவல் நிலைய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தது. அவர்கள் மனோஜித் மிஸ்ரா, 31, ஜைப் அகமது, 19, மற்றும் பிரமித் முகோபாத்யாய், 20 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் இன்னும் முறையான அறிக்கையை வெளியிடவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் மாணவர் என்றும், மற்ற இருவர் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மூன்று பேரும் வெள்ளிக்கிழமை அலிப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 1 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சித்தரஞ்சன் தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முக்கியமான தடயவியல் ஆதாரங்களை சேகரிக்க ஒரு தடயவியல் குழு நாளை மறுநாள் குற்றம் நடந்த இடத்திற்கு வருகை தர உள்ளது.
புகார்தாரர் தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரியின் மாணவர் ஆவார், அவர் முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டியதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அரசியல் எதிர்வினைகள்
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, இந்த நிகழ்வை “கொடூரமானது” என்று கூறினார். சமீபத்திய ஆர்ஜி கர் மருத்துவமனை சம்பவத்தை குறிப்பிட்டு, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மால்வியா கூறினார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பாஜக துணை நிற்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டையே உலுக்கிய பெண் மருத்துவர் கொலை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, அரசு நடத்தும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்குள் கஸ்பா பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
ஆகஸ்ட் 9, 2024 அன்று அதிகாலையில் மருத்துவமனையில் உள்ள ஒரு கருத்தரங்கு மண்டபத்தில் பயிற்சியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது, இது மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தூண்டியது. இதில் குற்றம்சாட்ட சஞ்சோய் ராய் மறுநாள் கைது செய்யப்பட்டார். அவருக்கு பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 700 வங்கிகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள் கண்டுபிடிப்பு.. 42 இடங்களில் சிபிஐ சோதனை.. பகீர் தகவல்கள்..