தமிழக சாலைகள் மரண குழிகளாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான விபத்து புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 21,122 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசுப் பேருந்துகளே அதிகளவில் விபத்துகளில் சிக்கியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளி விவரங்களின்படி, தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் கடந்த ஆண்டில் 1,444 விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளால் 463 உயிர்கள் பறிபோயுள்ளன. குறிப்பாக, விழுப்புரம் மண்டலப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் விபத்துகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளன. இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் அரசுப் பேருந்து விபத்துகளால் 221 பேர் உயிரிழந்திருப்பது, அந்தப் பகுதியில் நிலவும் சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் பணிச்சூழல் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிவேகம், கவனக்குறைவு மற்றும் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படும் பழைய பேருந்துகள் போன்றவையே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களாக சொல்லப்படுகின்றன. “பணத்தைச் செலுத்திவிட்டுப் பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்க்கும் எங்களுக்கு, மரண பயமே மிஞ்சுகிறது” எனப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசுப் போக்குவரத்துத் துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓட்டுநர்களுக்கு முறையான பயிற்சிகளையும், பேருந்துகளுக்கு உரியப் பராமரிப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Read More : புஸ்ஸி ஆனந்த் vs ஜான் ஆரோக்கியசாமி..!! திடீரென வெடித்த மோதல்..!! விஜய்க்கு பெரும் தலைவலி..!!



