ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது.
சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், இதனை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று அறிவித்தாலும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கத்தை 5.9 ரிக்டர் அளவிலான நிகழ்வாக அறிவித்தது, இது ஜூன் 18 அன்று 23:08 UTC மணிக்கு, நெமுரோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில், 14.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து பயணிகளின் தேவை குறைந்து வருவதைத் தொடர்ந்து, ஹாங்காங் ஏர்லைன்ஸ் தெற்கு ஜப்பானுக்கான விமான சேவைகளை குறைத்தது. அதாவது, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வதந்தி, ஜூலை 2025 இல் ஜப்பானை ஒரு பேரழிவு தரும் பூகம்பம் தாக்கும் என்று ஜப்பானிய கலைஞர் ரியோ டாட்சுகியின் தி ஃபியூச்சர் ஐ சா: கம்ப்ளீட் எடிஷன் (2022) என்ற மங்கா காமிக் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்தப் பிராந்தியத்திற்கான பயணத்தில் ஆர்வம் குறைந்து வருவதால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரபலமான இடங்களான ககோஷிமா மற்றும் குமாமோட்டோவுக்கான விமானங்களை நிறுத்த விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் பீதிக்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பான் தேசிய சுற்றுலா அமைப்பு (JNTO), வதந்தியை ஆதரிக்கும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது மற்றும் ஆதாரமற்ற கணிப்புகளால் பயணிகளை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.