மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை கொடுக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்தில் அகவிலைப்படியை பெறவில்லை. கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாத்திய சூழல் காரணமாக அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டது. கடந்த காலங்களில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகை கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை செயலாளரையும் சந்தித்தனர்.

ஆனால், நிலுவைத் தொகை குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், நிலுவைத் தொகை கோரி ஊழியர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது தொடர்பாக பிரதமரிடமும் முறையிட்டனர். ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாத நிலுவைத் தொகையை கொடுக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.