நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா காலத்திற்குப் பின்னர் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பின்னர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.