அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த பிரபல சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் தன்னுடைய 77-வது வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அலி அகமது அஸ்லாம் தனது குடும்பத்தோடு கடந்த 1964ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அங்கு ஷிஷ் மஹால் என்ற உணவகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதுமையான வகை வகையான உணவுகளை செய்து அசத்தியுள்ளார்.

சிக்கன் டிக்கா மசாலா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது..?
அலியின் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் டிக்கா ஆர்டர் செய்திருக்கிறார். அது மிகவும் வறண்டு போயிருப்பதாக அவர் கூறவே அந்த சிக்கன் டிக்காவை சாஸோடு சேர்த்து சமைக்கலாம் என அலி அகமது யோசித்த பிறகு உருவானதுதான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான உணவுகளை உண்ணும் பழக்கம் மேற்கத்திய நபர்களின் வழக்கத்தில் இல்லாததால் அவர்களுக்கு ஏற்றபடி சிக்கன் டிக்கா மசாலாவுக்கு தயிரும், க்ரீமும் கலந்த சாஸ் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. அலி அகமது கண்டுபிடித்த இந்த சிக்கன் டிக்கா மசாலா டிஷ் பிரிட்டிஷ் உணவகங்களில் மிகவும் பிரசித்தமானதாகவே இருந்து வருகிறது