நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது உடனடி பணப்பரிமாற்ற சேவையான IMPS (Immediate Payment Service)-க்கான புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், குறிப்பாக அதிக அளவிலான பணத்தை உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் என தெரிகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்களில், ஆன்லைன் மற்றும் வங்கி கிளைகள் மூலமான பரிமாற்றங்களுக்கு இடையே கட்டண வேறுபாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) நிர்வகிக்கப்படும் IMPS வசதி, விடுமுறை நாட்களிலும் 24 மணிநேரமும் உடனடியாக பணம் அனுப்ப வழிவகை செய்கிறது. புதிய விதிமுறைகளின்படி, ரூ.1,000 வரையிலான சிறிய அளவிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஆன்லைன் மற்றும் வங்கி கிளைகள் என இரண்டு முறைகளிலும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. அதேபோல், ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாது; ஆனால், இதே தொகையை வங்கி கிளைக்கு நேரில் சென்று அனுப்பினால் ரூ.2 முதல் ரூ.4 வரை (கூடுதல் ஜிஎஸ்டி) கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
நடுத்தர மற்றும் அதிக அளவிலான பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளன. ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ஆன்லைன் மூலம் அனுப்பினால் ரூ.2, கிளை மூலம் அனுப்பினால் ரூ.4 கட்டணம் விதிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான தொகைக்கு முறையே ரூ.6 மற்றும் ரூ.12 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பான ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைனில் ரூ.10 மற்றும் வங்கி கிளையில் ரூ.20 வசூலிக்கப்பட உள்ளது.
வங்கிகளில் கூட்ட நெரிசலை குறைக்கவும், வாடிக்கையாளர்களை மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் முறைகளுக்கு மாற்றவும் எஸ்பிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணத்தை தவிர்க்க டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.



