திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து, இன்றும் அருவ வடிவில் உலா வரும் ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக தலமாகும். 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர், திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார். திருவிடைமருதூர் போன்ற பிற தலங்களில் இவருக்கு ஜீவ சமாதி இருப்பினும், திருவண்ணாமலையில்தான் இவரது பரிபூரண அருள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
திருவண்ணாமலையின் மாபெரும் ரகசியங்களையும், ஈசனின் மகிமையையும் முழுமையாக அறிந்தவர் இடைக்காடர். இவர் கோடி ஆண்டுகளுக்கும் மேலாகக் கார்த்திகை தீபத்தை தரிசித்தவர் எனக் கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி தோறும் இடைக்காடர் உள்ளிட்ட பல சித்தர்கள் அருவ வடிவில் கிரிவலம் வருவதாக ஐதீகம் உள்ளது. கலசப்பாக்கம் அருகில் ஜீவசமாதி அடைந்த பூண்டி சித்தர் கூட, பௌர்ணமியில் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது.
வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் : இவரது ஜீவசமாதி ரகசியமாக உள்ளது. இவர் தினமும் கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு வந்து வழிபட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
பாம்பணையான் சித்தர் : இவர் மற்ற சித்தர்களைப் போலன்றி, மனித வடிவில் கிரிவலம் வருகிறார். குறிப்பாக, மார்கழி மாதப் பௌர்ணமியில் இவர் வலம் வருவதாகச் சொல்லப்படுகிறது. இவரது பார்வை நம் மீது பட்டால், விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
கணதங்கணான் சித்தர் : ரோகிணி, திருவாதிரை, பூசம் போன்ற சில குறிப்பிட்ட நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு, இவரது அருளால் சகல நோய்களும் நீங்கும் என்றும், வயிற்று நோய்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.
மாத சிவராத்திரி கிரிவலம் : இந்த நாட்களில் அர்த்தஜாம பூஜை நேரத்தில், குரு ஓரையில் கணதங்கணான் சித்தரைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால், ஆத்மா தூய்மை அடையும் என்று ஆன்மீக அன்பர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாமல், சீரியா சிவம் பாக்கினி சித்தர் போன்ற எண்ணற்ற சித்தர் பெருமக்கள் இந்த மலையைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, கிரிவலம் செல்லும்போது, வீண் அரட்டைகளை தவிர்த்து, தெய்வ சிந்தனையுடன் சிவ மந்திரங்களை உச்சரித்துச் சென்றால், சித்தர்களின் ஆசி கிடைப்பதுடன், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
Read More : வரலாறும் ஆன்மிக அதிசயமும் ஒன்றாக கூடி அமைந்த திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்..!! நெல்லையில் இப்படி ஒரு கோவிலா..