மேற்கு சிக்கிமில் உள்ள யாங்தாங் தொகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. வேகமாக ஓடும், கொந்தளிப்பான வெள்ளத்தில் அதிகாரிகள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்பதை பார்க்க முடிகிறது.
உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து, வெள்ளம் சூழ்ந்த ஹியூம் நதியின் மீது தற்காலிக மரக்கட்டை பாலம் கட்டிய பின்னர், காயமடைந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் வெளியேற்றினர். கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் தாங்ஷிங் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பிஷ்ணு மாயா போர்டெல் என்ற பெண் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொரு பெண் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
நிலச்சரிவுக்கு என்ன காரணம்?
கனமழையால் இப்பகுதி முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், பல கிராமங்களை பாதித்ததாகவும், மீட்புப் பணிகளைச் சிக்கலாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிக்கிமில் செப்டம்பர் 10 ஆம் தேதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.. மேலும் அம்மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
மேலும் இன்று முதல் வரும் 15ம் தேதி அரை மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் இமயமலைக்கு அடியில் உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அருணாச்சலப் பிரதேசம், அசாம் & மேகாலயா மற்றும் நாகாலாந்து & மணிப்பூர் ஆகிய இடங்களில் செப்டம்பர் 12 முதல் 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
வடமேற்கு இந்தியாவில், செப்டம்பர் 11, 12 மற்றும் 15 தேதிகளில் உத்தரபிரதேசத்திலும்; செப்டம்பர் 13 அன்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும்; செப்டம்பர் 12 முதல் 14 வரை உத்தரகண்டிலும் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.