பொன்முடி சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது..
பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, அவற்றின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அரசு தரப்பு வாதிட்டது. அப்போது நீதிபதி “ பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக இருந்தவர் ஏன் இப்படி பேச வேண்டும்..? அமைச்சராக இருந்தவர் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பான பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் அந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். கருத்து சுதந்திரத்திற்கு கூட கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் ஆனால் பொன்முடி தேவையில்லாத விஷயங்களை பேசி உள்ளதாகவும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி வேல்முருகன், சர்ச்சை கருத்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்.. பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.. ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்..
சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா என்றும் கேட்டார்.. இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரித்த அவர், இந்த நாட்டில் என்ன தான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு எனவும் தெரிவித்தார்.
மக்களுடன் தான் அமைச்சரும் வசிக்கிறார் என்ற எண்ணம் வர வேண்டும்.. உங்கள் செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்க முடியாது.. பொன்முடி மீது புகாரளித்தவருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்ற பிறகே வழக்கை முடிக்க முடியும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்..
Read More : முதல் அறிக்கையில் திருத்தம்.. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே விளக்கத்தில் முரண்..