உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஒரு திரைப்படத் திரைக்கதையை மிஞ்சும் வகையிலான வினோத திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. “என் மனைவி என்னைக் கொன்றுவிடுவார் எனப் பயமாக இருக்கிறது” என்று கூறி, தனது மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாக்பத்தைச் சேர்ந்த பங்கஜ் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளாகப் பூஜாவுக்கும், பங்கஜின் உறவினரான சஞ்சீவ் என்பவனுக்கும் இடையே தகாத உறவு நீடித்து வந்துள்ளது. இது குறித்து வேதனையுடன் பேசிய பங்கஜ், “என் மனைவி தினமும் இரவு உணவில் எனக்கும் குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துவிட்டு, நள்ளிரவில் தன் காதலனை சந்தித்து வந்தார். பிரபல ‘முஸ்கன் கொலை வழக்கில்’ உடலை வெட்டி டிரம்மில் அடைத்தது போல, என்னையும் என் மனைவி கொன்று நீல நிற டிரம்மில் அடைத்துவிடுவாரோ என்ற பயத்திலேயே நான் வாழ்ந்து வந்தேன்” எனத் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இந்த விவகாரம் டோகாட் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், உயிருக்குப் பயந்த பங்கஜ் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த கையோடு, அங்கேயே மாலைகளை வரவழைத்து தனது மனைவிக்கும், மருமகனுக்கும் தன் முன்னிலையிலேயே திருமணத்தை நடத்தி வைத்தார். “இனி இவளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என பங்கஜ் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் ஊரை விட்டுத் தலைமறைவாகினர். ஆனால், இத்தனை காலமாக தன்னுடன் வாழ்ந்த மனைவி செய்த துரோகத்தால் மனமுடைந்த பங்கஜ், “இனி இந்த ஊரில் என்னால் முகம் காட்டி வாழ முடியாது” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.



