தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற விஜய் அவர்களின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் மற்றும் அதில் தொண்டர்கள் காயமடைந்த கசப்பான சம்பவங்களை முன்மாதிரியாக கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த பொதுக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், வெயிலின் தாக்கம் மற்றும் நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கான நேரமும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே என வரையறுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தேவையற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கவும், தகுதியான உறுப்பினர்களை உறுதி செய்யவும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு நவீன முறையை கையாண்டுள்ளது. அதன்படி, தவெக உறுப்பினர்களுக்கு மட்டுமே பிரத்யேகமான ‘QR குறியீடு’ அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் (Passes) வழங்கப்பட்டுள்ளன. இந்த பாஸ்களை ஸ்கேன் செய்த பின்னரே உறுப்பினர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவில் காவல்துறையினர் மற்றும் கட்சித் தொண்டர் படையினர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
Read More : மெகா வாய்ப்பு..!! மின்சார கார்களுக்கு ரூ.3.8 லட்சம் வரை தள்ளுபடி..!! TATA நிறுவனம் அதிரடி..!!



