தனது சம்பளம் அதிகமானதால், மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு சாப்ட்வேர் இன்ஜினியர், அடித்து துன்புறுத்தி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் துவாரபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சைலஜா. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நமலா ஷ்யாம் என்ற மென்பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வரதட்சணையாக சைலஜா குடும்பத்தினர் ஒரு ஏக்கர் நிலம், ஒரு கிலோ தங்கம் கொடுத்துள்ளனர். திருமணம் நடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருவரும் இருந்தனர். இந்த இரண்டு வருடத்தில் ஷ்யாமின் சம்பளம் பல மடங்காக உயர்ந்தது. சம்பளம் அதிகரித்ததால் மனைவி சைலஜாவை அதிக வரதட்சணை வாங்கி வரும்படி ஷ்யாம் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மனைவி ஷைலஜா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் கூறவில்லை. மாறாக அங்கே வீட்டிற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்தனர்.

அதன் பின்னர் அவர் கணவன் மற்றும் வரதட்சணை கொடுமை செய்த மாமனார் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், சைலஜாவின் மாமனார் நமல ரங்காரஜ்ஜிடம் விசாரித்ததில், மருமகள் சைலஜா பெற்றோர் குறைந்த அளவில்தான் வரதட்சணை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.