தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் “ சென்னை தி நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, திமுகவுக்கு ஆதரவாக சேர்க்கப்பட்டுள்ளது.. திமுகவுக்கு ஆதரவாக சுமார் 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. எனவே 2026 தேர்தலுக்குள் தி.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து இறுதிப்பட்டியலை வெளியிட வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்தார்..
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு “ நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரை போன்று சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.. இந்த பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் தொடங்கும்.. அப்போது மனுதாரர் தரப்பில் தெரிவித்த புகார்கள் குறித்து கவனிக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
இதையடுத்து பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்..



