இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஆட்டம் கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஓப்பனர்களாக ஷபாலி வர்மா மற்றும் மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷபாலி 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து, மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யாஷ்டிகா ஜோடி சேர்ந்தார். யாஷ்டிகா 26 ரன்னுக்கு ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, மந்தனாவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்தார்.
![2-வது ஒருநாள் போட்டி..!! இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/123648315_c1b267d2-32d5-4838-9afd-7918cc55702a.jpg)
இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் டாமி பேமவுண்ட் மற்றும் எம்மா லேம்ப் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பேமவுண்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டங்க்லி 1 ரன்னும், லேம்ப் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தாக, அலீஸ் கேப்சே மற்றும் வியாட் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 44.2 ஒவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஹேமலதா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.