நாகை அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ரா.கங்கை நாதன்(40) என்பவருக்குச் சொந்தமான படகில் மறுவரசன்(37), வெங்கடேஷ்(31), ஞானப்பிரகாசம்(31), சந்தோஷ்(27) ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் புஷ்பவனத்துக்கு கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், வாளை காண்பித்து தமிழக மீனவர்களை மிரட்டி, தாக்கி, மீனவர்கள் வைத்திருந்த 50 கிலோ மீன்கள், 30 லிட்டர் டீசல், டார்ச் லைட், சிக்னல் லைட், 2 செல்போன்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
கோடியக்கரைக்கு கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை மிரட்டி, 20 லிட்டர் டீசல், வலை, டார்ச் லைட் ஆகியவற்றையும், மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜகோபால், சதீஷ், திருநாவுக்கரசு,ஜோதிமணி ஆகியோரை மிரட்டி டீசல், வலை, டார்ச் லைட், செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினர். இந்த கொள்ளைச் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.