15 வயது பள்ளி மாணவி தகாத உறவின் மூலம் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார், சிறுமியை அழைத்துக் கொண்டு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 10 மாதம் கார்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பிறகு அவருக்கு சிறிது நேரத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது, சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு சித்தியின் மகன் முகேஷ் வந்துள்ளார். அப்போது, மாணவியும் முகேஷும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இதில், கர்ப்பமான மாணவி இதுபற்றி பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார். மேலும், பள்ளிக்கும் வழக்கம்போல் சென்று வந்துள்ளார். இதனால், அவர் மீது யாரும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மாணவி மருத்துவமனைக்கு சென்ற போதுதான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவியை கர்ப்பமாக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான முகேஷ் என்பவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முகேஷை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.