அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று 50க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்கட்சி கொடிகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்தவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பையும் மீறி நுழைந்த நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
அப்போது அங்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கி கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முற்றுகை போராட்டம் ஏற்கனவே நடைபெறும் என போலீசாருக்கு வந்த தகவல் கிடைத்த பிறகும் முறையான பாதுகாப்பு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் போரூர் போலீசார் இருந்த காரணத்தால்தான் இந்த அடிதடி சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.