கேரளாவையே உலுக்கிய ‘ஜாலி ஜோசப்’ சயனைடு கொலை வழக்கு பாணியில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல முயன்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தை மறைக்கவும், தனது எல்லை மீறிய ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த குடும்பத்தினரை ஒழிக்கவும் சைத்ரா என்ற அந்தப் பெண் மேற்கொண்ட விபரீத முயற்சி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெலூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவரின் மனைவியான சைத்ராவுக்கு, ஏற்கனவே புனீத் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, தன்னை விட 5 வயது இளையவரான ஷிவு என்பவருடன் சைத்ரா புதிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரா, சைத்ராவின் வாட்ஸ்அப் கணக்கை கண்காணித்தபோது, அதில் ஷிவுவுடன் அவர் பகிர்ந்து கொண்ட அநாகரீகமான செய்திகளும், பல ஆண்களுடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துப் பேசிய திடுக்கிடும் தகவல்களும் சிக்கின.
தனது ரகசிய உறவு அம்பலமானதால் ஆத்திரமடைந்த சைத்ரா, ஷிவுவின் உதவியுடன் தனது கணவர், இரு குழந்தைகள் மற்றும் மாமனார்-மாமியாரை கொல்ல திட்டமிட்டார். இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் உணவு மற்றும் காபியில் வீரியம் மிக்க தூக்க மாத்திரைகளையும், நச்சுப் பொருட்களையும் தொடர்ந்து கலந்து வந்துள்ளார்.
இதனால் குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர் மயக்கம், நினைவுத்திறன் இழப்பு மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சைத்ராவின் பையில் இருந்த மர்ம மாத்திரைகளை கண்டுபிடித்த கஜேந்திரா, அவற்றை மருத்துவரிடம் காட்டியபோதுதான், அவை மூளைச்சாவுக்கு வழிவகுக்கும் ஆபத்தான மருந்துகள் என்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தப் பரிசோதனையில் விஷத்தடயங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கஜேந்திரா அளித்த புகாரின் பேரில் பெலூர் போலீசார் சைத்ராவை கைது செய்தனர். இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்த காதலன் ஷிவு தற்போது தலைமறைவாக உள்ளார். உணவில் நஞ்சு கலந்தது ஆதாரங்களுடன் உறுதியாகியுள்ளது, தலைமறைவான நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி முகமது சுஜீதா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கஜேந்திராவின் குடும்பத்தினர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Read More : ரீல்ஸ் மோகம்..!! போலீஸ் காதலனுடன் சேர கணவருக்கு கஞ்சா ஸ்கெட்ச்..!! கர்நாடக பெண்ணின் அதிரவைக்கும் பின்னணி..!!



