மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி முன்வைத்த விமர்சனத்திற்கு, தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டு என்ன..?
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்.பி., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சாடினார். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதியில் மூன்றில் ஒரு பங்கு கூட தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். “பாஜகவுக்கு தமிழக மக்களின் வாக்குகளே முக்கியமே தவிர, அவர்களின் வளர்ச்சி அல்ல” என அவர் பதிவு செய்திருந்தார்.
கனிமொழியின் இந்த விமர்சனத்திற்குத் தனது ‘எக்ஸ்’ (X) தள பக்கத்தில் பதில் அளித்துள்ள அண்ணாமலை, திமுக எம்பி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது சுமார் 35,701 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் அவை முடங்கி கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களுக்கு தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், 2025 டிசம்பர் மாதம் வரை வெறும் 24 சதவீத நிலத்தை மட்டுமே தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது என அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “கடந்த 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் நிலவும் தொய்வு காரணமாகவே பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதே நிலைதான் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் நீடிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழல் நிறைந்த திமுக அரசு திட்டமிட்டே மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக சாடிய அண்ணாமலை, “பொய்களை பரப்புவதை நிறுத்திவிட்டு, நிலம் கையகப்படுத்துவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று உங்கள் சகோதரரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடமே கேள்வி கேளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
Read More : ஒரு ரூபாய் கூட செலவின்றி கேஸ் சிலிண்டர் கனெக்ஷன்..!! மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி..?



