வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த நிலையில், இன்று காலை தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கனமழை அக்டோபர் 2-ஆம் தேதி வரையும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இன்றும் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இந்த சூழல் செப்.30ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மீனவர்கள் இந்த காலக்கட்டத்தில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்லவில்லை.
Read More : தலைமுடிக்கு டை யூஸ் பண்றீங்களா..? ரத்தப் புற்றுநோய் அபாயம்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!