அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபோகும் மக்கள் மற்றும் விசா மோசடியில் ஈடுபடுவோர் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X பதிவில், நாட்டின் சட்டத்தை மீறும் எவருக்கும் “குறிப்பிடத்தக்க குற்றத் தண்டனைகள்” வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் குட்டியேற்றத்திற்கு மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கலிபோர்னியா.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடிவரவு ரெய்ட்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், பெரும் போராட்டங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, 2025 ஜூன் 7 அன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசத்தின் அனுமதி இல்லாமலே, அந்த மாநிலத்தின் தேசிய காவல் படையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார். இதனுடன், ஆர்ப்பாட்டங்களைக் கையாள 4,000 தேசிய படை வீரர்கள் கலிபோர்னியா முழுவதும் நிறுத்தி வைத்திருந்தார் டிரம்ப்.
முன்னதாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஒரு மாதமாக விசா விண்ணப்பங்கள் தொடர்பான தொடர் அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. ஜூன் 26 அன்று, ஆவணம் வழங்கப்பட்ட பிறகும் அமெரிக்க விசாக்களுக்கான சோதனை நிறுத்தப்படுவதில்லை என்று தூதரகம் கூறியது. “அமெரிக்க சட்டங்கள் மற்றும் குடியேற்ற விதிகளை அவர்கள் பின்பற்றுவதை உறுதிசெய்ய விசா வைத்திருப்பவர்களை நாங்கள் தொடர்ந்து சரிபார்க்கிறோம் – மேலும் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் விசாக்களை ரத்து செய்து நாடு கடத்துவோம்” என்றும் தெரிவித்திருந்தது.
மற்றொரு பதிவில், அமெரிக்கா “குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவதையும் சட்டவிரோத வெளிநாட்டினரை அகற்றுவதையும்” அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவது தடுப்புக்காவல், நாடுகடத்தல் மற்றும் “எதிர்கால விசா தகுதிக்கான நிரந்தர விளைவுகளை” ஏற்படுத்தும் என்று பதிவிட்டிருந்தது. சட்டங்களை மீறுபவர்கள் சிறைத் தண்டனை மற்றும் நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை: அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு தூதரகத்தின் அறிக்கை வந்துள்ளது. X இல் ஒரு பதிவில், பயங்கரவாத நடவடிக்கையை ஆதரிப்பது போன்ற கடுமையான குற்றங்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் நிரந்தர குடியேற்றம் மற்றும் விசா சலுகைகளை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு நிறுவனம் கூறியது.
கிரீன் கார்டு அல்லது விசா வைத்திருப்பவர்கள் “வன்முறையை ஆதரித்தாலும், பயங்கரவாத நடவடிக்கையை ஆதரித்தாலும் அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்ய ஊக்குவித்தாலும்” அவர்கள் அமெரிக்காவில் தங்க தகுதியற்றவர்கள் என்று நிறுவனம் கூறியிருந்தது.